சீமான் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு
நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் பேசியதாக சீமானுக்கு எதிரான புகார் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை விமர்சித்தும் பேசியிருந்தார். ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு எதிராக வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர், காவல்துறையில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், அந்த மனுவை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எழும்பூர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ரத்து செய்து, தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், புகார் மீது வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

