"அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வெட்கக்கேடானது" - ஓபிஎஸ் தாக்கு!!

 
ops stalin

அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வெட்கக்கேடானது என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். 

tn

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.  செந்தில் பாலாஜி வீடு அவரது சகோதரர் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று அதிரடியாக காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.  இந்த சூழலில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக திமுக தொண்டர்கள் குவிந்த நிலையில் கரூரில் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் வருமான வரி சோதனை நடைபெறும் இடத்தில் அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர் .இதையடுத்து அங்கிருந்து அதிகாரிகள் புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் ராமகிருஷ்ண புரத்தில் வருமானவரித்துறை அதிகாரிகளை தடுத்த விவகாரம் குறித்து  பேசிய கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,  ஐடி ரெய்டு குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் புகார் அளித்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்



இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர்  பக்கத்தில், "டாஸ்மாக் கடைகளில் ஒரு மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலிக்கப்படுகிறது என்ற புகார் பரவியதையடுத்து, இன்று அமைச்சருக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரிச்சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது வாகனங்கள் தாக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. 

திரையில் நடப்பதெல்லாம் நிஜத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது. அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வெட்கக்கேடானது.

தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் பணியை தொடர்ந்து மேற்கொள்ள ஏதுவாக அவர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.