செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

 
ops

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், முன்னதாக அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என இரு தரப்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் தென்னரசும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் ஓ.பன்னீர்செல்வத்தின் வேட்பாளர் வாபஸ் பெறப்பட்ட நிலையில், ஒரே வேட்பாளராக தென்னரசு நிறுத்தப்பட்டார். அவர் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் சுமார் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடதக்கது. 

ops

இந்நிலையில், இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டுள்ளார். கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக அமைப்புச் செயலாளர், திரு. B. செந்தில் முருகன் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.