அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை கோரும் ஈபிஎஸ் வழக்கை தள்ளிவைக்கும்படி ஓபிஎஸ் கோரிக்கை
அதிமுக தீர்மானங்களை வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ஆராய்ந்துவிட்டு வாதங்களை முன்வைக்க இருப்பதால், அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தடைகோரிய எடப்பாடி பழனிசாமி வழக்கை தள்ளிவைக்கும்படி ஒ.பன்னீர்செல்வம் வைத்த கோரிக்கையை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை அடுத்த மாத்ததிற்கு தள்ளிவைத்துள்ளது.
அதிமுக-விலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால், இவற்றை பயன்படுத்த பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்ய தாமதபடுத்தியதால், அதிமுக பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்-க்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்ததுடன், தடையை நீக்கக் கோரி தனி நீதிபதியிடம் மனுத்தாக்கல் செய்ய அறிவுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்திருந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பாக இன்று மீண்டும் விசாரணக்கு வந்தபோது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வழக்கறிஞர் கெளதம் ஆஜராகி, ஓ.பி.எஸ்-க்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த ஓபிஎஸ்-ன் மேல்முறையீடு வழக்கு உயர் நீதிமன்றத்திலும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த ஓபிஎஸ்-ன் மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ஆராய்ந்த பிறகு, இந்த வழக்கில் வாதங்களை முன்வைக்க வேண்டி உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனையேற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 26ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.