மதுரை தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்..

 
ஓபிஎஸ்


கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, மதுரை தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் உள்ள கரும்பு விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யும் ஒரே கூட்டுறவு நிறுவனமாக தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை விளங்குவதோடு,  அந்த ஆலையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியாற்றும் ஊழியர்களுக்கும் வாழ்வாதாரமாக திகழ்கிறது.

மதுரை சர்க்கரை ஆலை

 2019- 20 மற்றும் 2020 -21 ஆகிய ஆண்டுகளுக்கான அரவை பருவத்தில் போதிய மழையின்மை காரணமாகவும்,  கரும்பு பதிவு குறைவாக இருந்ததன் காரணமாக  மதுரை டேசிய கூட்டுறவு ஆலையை இயக்க முடியாத சூழ்நிலை நிலவியது. ஆலையை இயக்க முடியாத நிலை இருந்தபோதிலும், விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு காலகட்டங்களில் 22 கோடியே 16 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை வழங்கப்பட்டது.  இது மட்டுமல்லாமல் ஆலைத் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான நிலுவை ஊதியம் மற்றும் அத்தியாவசிய ஆலை செலவினங்கள் என 17 கோடியே 16 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

கரும்பு விவசாயம்

நடப்பாண்டில் (2021 -22)  நல்ல மழை பெய்து உள்ளதன் காரணமாக கரும்பு மகசூல் அதிகரித்ததை அடுத்து 60 ,000 டன் பதிவு செய்யப்பட்ட கருத்துகளும், 17, 000 டன் பதிவு செய்யப்படாத கரும்புகள்  அரவைக்கு  தயார் நிலையில் உள்ளதாகவும், அரவை துவங்குவதற்கு முன் மேற்கொள்ளப்பட வேண்டிய சுத்திகரிப்பு பணிகள் 70 விழுக்காடு முடிவடைந்து விட்டதாகவும், மீதமுள்ள 30 விழுக்காடு பணிகள் மேற்கொள்ள நிதி இல்லாததன் காரணமாக நிறைவடையவில்லை என்றும், பராமரிப்பு செலவு, கரும்பு வெட்டுவதற்கு முன் பணம் ஆகியவற்றுக்கு 10 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும், 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையிலான ஆலை ஊழியர்களின் ஊதியத்திற்கு 11 கோடியே 16 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும்,  ஆலை நிர்வாகம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ்

 2021 2022 ஆம் ஆண்டிற்கான அரவைப் பருவத்திற்கு  இந்த ஆலையை திறப்பதற்கான அனுமதியை வழங்கவேண்டும் என்றும், ஆலை பராமரிப்பு ஊதிய நிலுவை என கிட்டத்தட்ட 22 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என்றும்,  ஆலய நிர்வாகத்தின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  கரும்பு அரவைக்கு தயாராக உள்ளதால் உடனடியாக ஆலையை திறக்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகளும் போராட்டம் நடத்தினர்.

 இந்த ஆலையை இயக்குவதன் மூலம் 10,000 கரும்பு விவசாயிகளும், 500 தொழிலாளர்களும் நேரடியாக பயன்பெறுவர் என்பதோடு,  கரும்பு வாகன போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் லாரி, டிராக்டர் மற்றும் மாட்டு வண்டி இயக்குபவர்கள், அதைச்சார்ந்த தொழிலாளர்களும், விவசாயக் கூலித் தொழிலாளர்களும், ஒப்பந்த தொழிலாளர்கள், வணிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் மறைமுகமாக பயன்பெறுவார்கள்.  மேற்படி ஆலய இயக்க அரசு நிதி உதவி புரியவேண்டும் என்பதே கரும்பு விவசாயிகள் மற்றும் ஆலை தொழிலாளர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

எனவே கரும்பு விவசாயிகள் மற்றும் ஆலையை தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு,  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு, மதுரையில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் “ என்று குறிப்பிட்டுள்ளார்.