மறைந்தது இந்தியாவின் இசைக்குயில் : ஓபிஎஸ் - தினகரன் இரங்கல்!!
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இந்தியாவின் இசைக்குயில் என போற்றப்படுபவரும், 70 ஆண்டுகளுக்கும் மேலாக கலைத் துறையில் கொடிகட்டி பறந்தவரும் ,இந்திய திருநாட்டின் புகழ் பெற்ற பாடகியும் இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினைப் பெற்ற வரும் ,தன்னுடைய குரலினால் அனைவரையும் வசீகரப்படுத்தியவருமான செல்வி லதா மங்கேஷ்கர் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். அன்னாருக்கு எனது அஞ்சலி செலுத்துவதோடு அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆத்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "பிரபல பின்னணி பாடகர் பாரத ரத்னா திருமதி.லதா மங்கேஷ்கர் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். அவர் பாடிய காலத்தால் அழியாத பாடல்களின் வழியே என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார். திருமதி.லதா மங்கேஷ்கர் அவர்களின் மறைவால் வாடும் உறவினர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.