பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ்க்கு அனுமதி மறுப்பு!
திருச்சி வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜக தலைமை அனுமதி வழங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் வருகிறார். தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் இன்று இரவு 10:30 மணி அளவில் திருச்சி விமான நிலையம் வருகிறார். திருச்சி விமான நிலையத்திற்கு வந்திறங்கும் பிரதமர் இரவு திருச்சியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஓய்வெடுப்பதாக கூறப்படுகிறது. ஓய்வுக்கு பின் நாளை காலை மீண்டும் திருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கங்கைகொண்ட சோழபுரம் சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்படும் பிரதமர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் வந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
இன்று இரவு 10.45 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்கவுள்ளார். அவருடன் கே.பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோறும் பிரதமரை சந்திக்கவுள்ளனர். இந்நிலையில் திருச்சி வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜக தலைமை அனுமதி வழங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரை ஓபிஎஸ் சந்திப்பதை ஈபிஎஸ் தரப்பு விரும்பாது என்பதால் அனுமதி மறுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


