பால் கொள்முதல் விலையை உயர்த்த சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு..!

 
1

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட வேண்டுமென சட்டமன்றத்தில் திமுக MLA எ.வ.வேலு மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் விஜயலட்சுமி, கடந்த திமுக ஆட்சியின் போது மேற்கொள்ளப்பட்ட நிர்வாக குளறுபடிகள் காரணமாகவே தற்போது ஆவின் நிர்வாகம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது என குற்றம்சாட்டினார்.


இதுதொடர்பாக பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, ஆவினுக்கு பால் வழங்குவது ஒரு கேள்விக்குறியாக மாறியுள்ளது. தீவனங்கள் விலை உயர்வால் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை கட்டுப்படியாகவில்லை. கேரளத்தில் ஒரு லிட்டர் ரூ.45க்கு பாலை கொள்முதல் செய்கின்றனர். அதைபோல தமிழகத்திலும் பால் கொள்முதல் விலையை ரூ.45 ஆக உயர்த்த வேண்டும் என்று அவர் கூறினார். 

தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், கால்நடைகளின் தீவனங்கள் விலையும் பராமரிப்பு செலவும் அதிகரித்துள்ளது; அரசு அறிவித்த விலை போதாது என தமிழ்நாடு முழுவதும் பால் முகவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். அரசு அறிவித்துள்ள பால் கொள்முதல் விலை கூடுதலாக உயர்த்தப்பட வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். 

1 லிட்டர் பசும்பால் ரூ.50, எருமை பால் ரூ.60 என கொள்முதல் விலை கொடுக்க வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்த பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்குவது மிக முக்கியமானது என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை. தி.மு.க அரசால் 2021-ம் ஆண்டு ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டதால் ஆவின் நிறுவனத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 270 கோடி கூடுதல் நஷ்டம் ஏற்பட்டது. விலை குறைப்பினால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்யவும், பால் கொள்முதல் மற்றும் விற்பனையை அதிகரிக்க எந்த முயற்சியும் எடுக்காமல் திமுக அரசு மெத்தன போக்கில் செயல்பட்டது; இதனால் ஆவின் நிறுவனம் கூடுதல் நிதிசுமையை எதிர்க்கொண்டு வருகிறது. 

தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளுக்கு பிறகே பால் கொள்முதல் விலையை உயர்த்தினார்கள்.. ஆனால் முதல்வர் விஜய் ஆட்சி பொறுப்பேற்று 3 மாதத்தில் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளார். அதைபோல பால் கொள்முதல் விலையை ரூ.44 ஆக உயர்த்த முதலமைச்சருடன் ஆலோசித்து பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.