கனியாமூர் தனியார் பள்ளி : இன்று முதல் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்..

கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் ( ஜூலை 27) ஆன்லைன் வகுப்பு தொடங்கப்படுகின்றன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூரில் செயல்பட்டு வந்த , சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்கிற மாணவி கடந்த 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டிய நிலையில், கடந்த 17-ந்தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம், கலவரமாக வெடித்தது. இதில் அந்த தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. பள்ளி பேருந்துகள், போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
மேசை நாற்காலிகள், மின்விசிறி, லைட்டுகள் அடித்து நொறுக்கப்பட்டன. சான்றிதழ்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் பள்ளி மூடப்பட்டது. இந்த வன்முறையால் அந்தப் பள்ளியில் பயின்று வந்த 4,500 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. அதன்பிறகு 10 நாட்களுக்கும் மேலாகியும் அவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படவில்லை.. அவர்களின் கல்வி எதிர்காலம் குறித்து பெற்றோர் கவலையடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று சக்தி பள்ளியை திறப்பு என்பது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் , கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷரவன்குமார் உடன் ஆலோசனை நடத்தினார். அந்தப் பள்ளியில் பயின்று வரும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவர்களின் நலன் கருதி பள்ளி திறப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் ( ஜூலை 27 ) ஆன்லைன் வகுப்பு தொடங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். அதன்படி சக்தி பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பள்ளி உரிமையாளரின் மனைவி தலைமையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.