வாணியம்பாடியில் பன்றி காய்ச்சலுக்கு ஒருவர் பலி

வாணியம்பாடியில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதி, பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் ரவிக்குமார்(59). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 15 நாட்களுக்கு முன் நுரையீரல் பிரச்சனை காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று விடியற்காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்கள் அவர் வசித்து வந்த வீடு மற்றும் அப்பகுதிகளில் நதுய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் அவர் நடத்தி வந்த கடையை ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து மூட நகராட்சி ஆணையாளர் செந்தில்குமார் உத்தரவுவிட்டுள்ளார்.