சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்
![சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள சவுக்கு சங்கர்...](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded_original/fb64878888e51e0e46d108ce42821bfb.webp)
யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ரெட் பிக்ஸ் யூட்யூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி அளித்த சவுக்கு சங்கர் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவல்துறையினர் குறித்து அவதூறாக கருத்துக்களை தெரிவித்தார். இது தொடர்பாக கோவையை சேர்ந்த காவலர் சுகன்யா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து கடந்த 4ம் தேதி தேனி அருகே பழனி செட்டிப்பட்டி யில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். அத்துடன் அவரது காரில் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கோவை அழைத்துவரப்பட்ட அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் மனு அளித்து இருந்தனர். இந்நிலையில் வழக்கை விசாரித்த கோவை 4 வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு ஒரு நாள் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, நாளை மாலை 5 மணி வரை சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது 3 மணிநேரத்திற்கு ஒருமுறை வழக்கறிஞரை சவுக்கு சங்கர் சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.