“ஆர்டிஓ அலுவலகத்தில் ஒரு ரூபாய் கூட லஞ்சம் இல்லை..”- 500 ஆம்னி பேருந்துகளை அரசு பேருந்து கட்டணத்தில் இயக்க தயார்- ஆம்னி உரிமையாளர்கள்
தங்களிடம் உள்ள 500 ஆம்னி பேருந்துகளை அரசு கட்டணத்தில் இயக்க தயார் என ஆம்னி பேருந்து உரிமையாளர்களில் ஒரு தரப்பினர் அறிவித்துள்ளனர்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம்னி பேருந்து உரிமையாளர்களில் ஒரு தரப்பினர், “தங்களிடம் உள்ள 500 ஆம்னி பேருந்துகளை அரசு கட்டணத்தில் இயக்க தயார். போக்குவரத்து துறையில் லஞ்சம் குறைந்துவிட்டதால் இவ்வாறு முடிவு செய்துள்ளோம். ஆர்டிஓ அலுவலகங்களில் ஆம்னி பஸ்களுக்கான அனுமதியை பெறுவதற்கு ஒரு ரூபாய் கூட தற்போது லஞ்சம் வாங்குவதில்லை. ஒரு ரூபாய் கூட லஞ்சம் இல்லாமல் 40 பேருந்துகளுக்கு பெர்மிட் வாங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் ஆர்டிஓ அலுவலகத்தில் பெர்மிட் வாங்குவதற்கு ஒரு பேருந்துக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்து வந்தோம். தற்போது அதிகாரிகள் ஒரு ரூபாய் லஞ்சம் இல்லாமல் ஆம்னி பஸ் பெர்மிட் கொடுக்கிறார்கள். லஞ்சம் இல்லாததால் தான் அரசு கட்டணத்திலேயே தற்போது ஆம்னி பேருந்துகளை இயக்க முன் வந்துள்ளோம். இடைத்தரகர்கள் மட்டும் பணம் கொடுக்க முயற்சிக்கிறார்கள்.
அரசு பேருந்து கட்டணத்தில் வருடம் முழுவதும் இயக்க அனுமதி வழங்க வேண்டி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் சங்கம் முதலமைச்சரிடம் கோரிக்கைகளுடன் மனு அளித்துள்ளோம். விழா காலங்களில் ஆம்னி பஸ் கட்டணம் உயர்வதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆம்னி பேருந்துகளுக்கு சுற்றுலா பேருந்து அனுமதி கொடுக்க வேண்டும்” என்றார்.

