வங்கியில் 1.15 கிலோ தங்கத்தை விட்டு சென்ற பெண் சிக்கினார்! பரபரப்பு பின்னணி
சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள, எச்டிஎப்சி வங்கியில் கடந்த ஐந்தாம் தேதி 1.25 கிலோ நகையை விட்டுச் சென்ற பெண் சிக்கினார்.

சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள, எச்டிஎப்சி வங்கியில் கடந்த ஐந்தாம் தேதி வங்கி லாக்கரில் நகை வைக்க வேண்டும்.. அதற்கான நடைமுறைகள் என்னென்ன என்று கேட்டுவிட்டு ஒன்றே கால் கிலோ நகை இருந்த பையை பெண் ஒருவர் விட்டு சென்ற சம்பவத்தில் திடீர் திருப்பமாக, நகையை விட்டுச் சென்றது அதே வங்கியில் ஏற்கனவே கடந்த ஓராண்டுக்கு முன்பு மேலாளராக பணியாற்றிய பத்ம பிரியா(37) என்பது தெரிய வந்தது. லாக்கரில் இருந்த ஒரு நபரின் 250 கிராம் நகைகளை திருடியதாக கடந்த செப்டம்பர் மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஒரு வாரத்துக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இதேபோல் குணவதி என்பவரின் லாக்கரில் இருந்து இருந்த ஒன்றேகால் கிலோ நகையையும் திருடியுள்ளார். இது தொடர்பாகவே மீண்டும் கைது செய்யப்படுவோமோ? என்று பயந்து பர்தா அணிந்து வந்து, எப்படியாவது அந்த லாக்கரில் நகையை வைத்து விட்டு சென்று விடலாம் என முயற்சி செய்துள்ளார். ஆனால் அது முடியாததால், நகை பையை விட்டுவிட்டு சென்றுள்ளார். தங்கும் விடுதியில் வசித்து வரும் பத்மபிரியாவிடம் நடத்திய விசாரணையில், சொந்தமாக தொழில் செய்து அவரது கணவர் கடன் தொல்லை காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார் என்பதும், கடன்காரர்கள் நெருக்கடி கொடுக்கவே திருட்டு வேலையில் ஈடுபட்டதாகவும் ஒப்புக்கொண்டார்.


