கீழடி ஆய்வுகளை இருட்டடிப்பு செய்து, வெளியுலகிற்கு தெரியாமல் மறைக்கனும்.. அதுதான் அவங்க நோக்கம் - கனிமொழி எம்.பி.,
கீழடியில் நாம் எடுத்திருக்கக்கூடிய ஆய்வுகளை இருட்டடிப்பு செய்து, வெளி உலகத்திற்கு தெரியாமல் மறைக்க வேண்டும் என்று மத்திய அரசு செயல்படுவதாக திமுக எம்.பியும், துணை பொதுச்செயலாளருமான கனிமொழி தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் திமுக இலக்கிய அணி,கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை,மகளிர் அணி மகளிர் தொண்டர் அணி ஆகிய அணிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி., கனிமொழி, “ தமிழ்நாட்டின் வரலாற்றை, தமிழ் மக்களின் பெருமைகளை தொடர்ந்து இருட்டடிப்பு செய்ய வேண்டும் அதை வெளிச்சத்திற்கு கொண்டுவரக் கூடாது. தமிழின் தொன்மையை குறைத்து காட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு மாத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, இரும்பு காலம் தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்கியது,

தமிழ்நாட்டில் இருந்து தான் வரலாறு தொடங்கியது என்று சொல்லக்கூடிய அளவிலான ஒரு ஆய்வை செய்து வெளியிட்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு தொன்மை மிகுந்த ஒரு பாரம்பரியம்,ஒரு கலாச்சாரம் கொண்டிருக்கக் கூடிய தமிழ்நாட்டின் பெருமைகளை தொடர்ந்து புறக்கணிக்கக் கூடிய செயல்களில் தான் மத்திய அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக தான் கீழடியில் நாம் எடுத்திருக்கக்கூடிய ஆய்வுகளை இருட்டடிப்பு செய்து வெளி உலகத்திற்கு தெரியாமல் மறைக்க வேண்டும் என்று அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
மேலும், லாக்-கப் மரணங்கள் நிச்சயமாக நடக்கக் கூடாத ஒன்று, முதலமைச்சர் நிச்சயமாக இதற்கு சரியான நடவடிக்கை எடுப்பார் என்றும் கனிமொழி தெரிவித்தார்.


