“10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் சான்றிதழ் வழங்க வேண்டும்”
Jun 19, 2021, 04:46 IST1624058187000
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் சான்றிதழ் வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படாது. தேர்ச்சி மட்டுமே சான்றிதழில் குறிப்பிடப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது அதிர்ச்சி அளிப்பதாக மாணவர்கள், பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
மதிப்பெண் இல்லாத சான்றிதழ் என்பதால், எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு பெறுவதில் சிக்கல் ஏற்படுமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழக முதல்வர் இதில்உடனடியாக தலையிட்டு, 10-ம்வகுப்பு மாணவர்களின் சான்றிதழ்களில் மதிப்பெண்கள் இடம்பெற வழிவகை செய்ய வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்