கொடைக்கானலில் 4 லட்சத்தை தாண்டிய இ-பாஸ் எண்ணிக்கை..!

 
1

கொடைக்கானலில் கோடை பருவத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது போன்ற பருவ காலங்களில் அளவுக்கு அதிகமான வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க, செவ்வாய்க்கிழமை (மே 7) முதல் ஜூன் 30 வரை கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இ-பாஸ் முறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து, அதற்கான வழிகாட்டி நெறிமுறைகள், இ-பாஸ் பெறுவதற்கான epass.tnega.org என்ற இணைய முகவரி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் திங்கட்கிழமை (மே 6) காலை 6 மணி முதல் கொடைக்கானல் செல்ல 
இ-பாஸ் பெறுவதற்கான பதிவுகள் தொடங்கின. சுற்றுலாப் பயணிகள் பலரும் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். சுற்றுலாப் பயணிகளின் பெயர், முகவரி, எந்த வாகனத்தில் வருகை புரிகிறார்கள், வாகனத்தில் எத்தனை நபர்கள் வருகிறார்கள், தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பதிவு செய்த உடனே இ-பாஸ் வழங்கப்படுகிறது.

இ-பாஸ் கால அவகாசம் உள்ளிட்ட விவரங்களை கியூஆர் குறியீடு  மூலம் தெரிந்துகொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அவர்களது கைப்பேசி வாயிலாகவும், வெளிநாடுகளில் இருந்து வருவோர் மின்னஞ்சல் முகவரி வாயிலாகவும் அடிப்படை விவரங்களைச் சமர்ப்பித்து இ-பாஸ் பெறலாம். அரசுப் பேருந்துகளில் பயணிப்போர் இ-பாஸ் பெற வேண்டியதில்லை.

கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களும் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகில் உள்ள சுங்கச் சாவடியில் கியூஆர் குறியீடு மூலம் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பிறகே நகருக்குள் இருசக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்பட்டன.

இந்நிலையில், நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் இ-பாஸ் பெற்றதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.“கொடைக்கானல் செல்ல நாள் ஒன்றுக்கு சுமார் பத்தாயிரம் விண்ணப்பங்கள் வருகின்றன. கடந்த 7ஆம் தேதி முதல் இ-பாஸ் பெற்றவர்கள் மட்டுமே கொடைக்கானலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்,” என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.