இனி வெறும் 50 ரூபாய் செலவில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு செல்லலாம்..!

 
1

சென்னையில் இருந்து வேலூர் காண்டோன்மென்ட் வரை செல்லும் மின்சார ரயிலை திருவண்ணாமலை வரை இயக்க பொதுமக்கள் பல நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இதன் முடிவில், கடந்த வாரம் சென்னையில் இருந்து வேலூர் கான்டோன்மென்ட் செல்லும் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் அறிவித்தது.

இதன்படி, மே 2 முதல் ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில பராமரிப்பு பணிகள் காரணமாக  தற்காலிகமாக இச்சேவை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் சற்று குழப்பம் அடைந்தனர்.

இந்த நிலையில்,மே 3 முதல் சென்னை கடற்கரை முதல் திருவண்ணாமலை வரை செல்லும் சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே உறுதி அளித்தது.இதன்படி, சென்னை கடற்கரை முதல் திருவண்ணாமலை வரை செல்லும் சிறப்பு மின்சார ரயில் இயக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.

சென்னை கடற்கரை முதல் திருவண்ணாமலை வரை செல்லும் மின்சார ரயிலில் ரூபாய் 50 கட்டணத்தில் பயணிக்கலாம். மேலும் இந்த சிறப்பு மின்சார ரயில், திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு 5.40 மணிக்கு வேலூர் காண்டோன்மென்ட் வந்தடையும். அதனை அடுத்து, அங்கிருந்து புறப்படும் சிறப்பு ரயில் காலை 9:40 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

அதேபோல் மறு மார்க்கமாக, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு மின்சார ரயில் இரவு 9:35 மணிக்கு வேலூர் கான்டோன்மென்ட் ரயில் நிலையத்தைச் சென்றடையும். பின்னர், அங்கிருந்து 9:40 மணிக்கு புறப்பட்டு இரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.