வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- டிஜிபி சுற்றறிக்கை

தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினருக்கு ரூ.75 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை 21.10.2023 அன்று தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில், 01.10.2023 முதல் 14.11.2023 வரை 221.0 மி.மி. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவைக் காட்டிலும் 17 விழுக்காடு குறைவு ஆகும். வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 14.11.2023 முடிய, 8 மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவும், 8 மாவட்டங்களில் இயல்பான மழைப்பொழிவும், 22 மாவட்டங்களில் குறைவான மழைப்பொழிவும், ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வடகிழக்குப் பருவமழைக்கென மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், “தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினருக்கு ரூ.75 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அதிதீவிரப்படை பயிற்சி பள்ளியின் மூலம் 17,305 காவல் ஆளிநர்களுக்கும், 1095 ஊர் காவல் படை ஆளிநர்களுக்கும், 793 தன்னார்வலர்களுக்கும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழைக்கான ADGP Operations அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டறை 24*7 மணிநேரமும் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. அந்தந்த எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் மழைப்பொழின் அளவு, அணைகளின் நீர்மட்டம் போன்றவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், 24 மணிநேர அவசர உதவி எண்கள்: 112,1070,9445869843,9445869848 தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.