தேமுதிக அங்கம் வகிக்காமல், எந்த கட்சியும் ஜெயிக்க முடியாத நிலை உள்ளது - பிரேமலதா விஜயகாந்த்!
இக்கூட்டத்தில் பேசிய அவர், '' இந்த கூட்டம் மிகவும் முக்கியமான ஒன்று. அனைத்து தொகுதிகளிலும் 'உள்ளம் தேடி, இல்லம் நாடி, ரத யாத்திரை' நடைபெறுகிறது. கோவை மாவட்டத்திற்கு ஏற்கனவே வந்திருக்க வேண்டும் ஆனால், தாயார் மறைவினால் வர இயலாமல் போனது. புயலே வந்தாலும் ஆலோசனை கூட்டம் நடக்கும், எவ்வித இடையூறும் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது.
தொடர்ந்து பேசிய அவர், ''கேப்டன் மறைந்து விட்டார், கட்சி மறைந்து விட்டது'' என்று கூறியவர்களெல்லாம் தற்பொழுது வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். தேமுதிக அங்கம் வகிக்காமல், எந்த கட்சியும் ஜெயிக்க முடியாத நிலை உள்ளது. அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளார்கள்.
நாம் கேப்டன் போட்டுக் கொடுத்த பாதையிலே பயணிப்போம். வெகுவிரைவில் இளைஞர் அணி செயலாளராக விஜய பிரபாகரன் அறிவிக்கப்படுவார். அவர் ஜூனியர் கேப்டன், கோவையின் செல்லப்பிள்ளை. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. நாம் ஜெயித்த பிறகு இது குறித்து பிரதமரை சந்திப்பேன். 'ஸ்மார்ட் சிட்டி திட்டம்' என்று அறிவித்தால் அதன்படி, செயல்படுத்த வேண்டும். துபாய்க்கு இணையாக மாற்ற வேண்டும். தேர்தலுக்குப் பிறகு கோவை மற்றும் மதுரை மக்களுக்காக மெட்ரோ ரயில் திட்டம் குறித்து தேமுதிக குரல் கொடுக்கும்.'' என்றார்.
SIR குறித்துப் பேசிய அவர், '' வட மாநிலங்களில் இருந்து பல பேர் இங்கு வேலைக்கு வருகிறார்கள், அவர்களுக்கெல்லாம் இங்கு ஓட்டுரிமை கொடுத்து தமிழர்களாக மாற்றுவதாக பல்வேறு தகவல்கள் வருகிறது. வடமாநிலத்தில் இருந்து இங்கு வந்து பணிபுரியலாம், சம்பளம் வாங்கலாம் ஆனால், ஓட்டுரிமை என்பது அவரவர் பிறந்த மாநிலத்தில் தான் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழர்களுக்கும், பல ஆண்டுகளாக இங்கு வசிப்பவர்களுக்கும் தான் ஓட்டுரிமை வழங்க வேண்டும். மக்களின் ஓட்டுகளை திருட வேண்டும் என்று நினைத்தால் மக்கள் புரட்சி வெடிக்கும்.'' என்றார்.


