இனி அபராதம் 500 ரூபாய் இல்லை... 1000 ரூபாய் - ரயில்வே அமைச்சகம்..!
ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் குப்பை போடுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை ரூ.500லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தியது ரயில்வே அமைச்சகம்
ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் குப்பை போடுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை ரயில்வே அமைச்சகம் ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தியுள்ளது. ரயில்கள் மற்றும் நிலையங்களில் தூய்மையைப் பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயணிகள் குப்பைகளை உரிய இடங்களில் மட்டுமே போட்டு, ரயில்வேயின் தூய்மை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள போக்குவரத்து சேவைகளில் இந்தியன் ரயில்வே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நீண்டதூரப் பயணங்களுக்குச் செல்லும் போது விமானங்களுடன் ஒப்பிடுகையில், ரயில்களின் பங்களிப்பு இன்றியமையாதது.
அந்த வேளையில், ரயில்கள், ரயில் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தாலும், பயணிகள் யாரும் அதனை பொருள்படுத்துவதே கிடையாது.
ரயில்களிலேயே குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தாலும்கூட, தின்பண்டங்களின் கவர்கள், தண்ணீர் புட்டிகளைப் பயன்படுத்திவிட்டு அப்படியே இருக்கைகளுக்கு அடியில் போடுவது, ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறிவது போன்ற 'சிவிக் சென்ஸ்' இல்லாத செயல்களில் ஈடுபடுவது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அம்ரூத் பாரத் உள்ளிட்ட திட்டங்களில் ரயில் நிலையங்கள் நவீனத் தரத்தில் மேம்படுத்தப்படும் சூழலில் இதுபோன்ற முகம் சுழிக்க வைக்கும் செயல்கள் பலரையும் அதிருப்திக்கு உள்ளாக்குகின்றனர்.
2012 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை ரயில்கள், ரயில் நிலையங்களில் குப்பை போட்டால் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ரயில்கள், ரயில் நிலையங்களில் குப்பைகள் போட்டால் ரூ. 500-லிருந்து ரூ. 1000-ஆக அபராதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ஆக. 24 ஆம் தேதியிட்ட அரசிதழில் செய்தி வெளியிட்டுள்ளது.
ரயில்வே வளாகத்தில் சமைத்தல், குளித்தல், எச்சில் துப்புதல் மற்றும் சிறுநீர் கழித்தல் போன்ற பிற நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கடுமையாக விதிகள் கடைப்பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறுபவர்கள் மீது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, அவர்களுக்கு ரூ. 2,000 வரை அபராதம் விதிக்கப்படும். அதுமட்டுமின்றி, ரயில் பெட்டிகளிலும் ரயில்வே சொத்துக்களிலும் சுவரொட்டிகளை ஒட்டவோ, முழக்கங்கள் அல்லது செய்திகளை எழுதவோ, ஓவியங்கள் வரையவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

