இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தல் - நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்

 
Ooty

இ-பாஸ் நடைமுறையை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் வணிகர்கள் இன்று ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கோடை காலத்தில் ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் . அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் வாகனம் காரணமாக ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக (ஏப்ரல் - 1) நேற்று முதல் இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே இன்று முதல் கொடைக்கானல் பகுதிக்கு அனுமதிக்கப்படும் என்றும், வேலை நாட்களில் நான்காயிரம் வாகனங்களும் விடுமுறை நாட்களில் ஆறாயிரம் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியன் சரவணன்‌ அறிவித்திருந்தார். இதனையடுத்து திண்டுக்கல் - தேனி எல்லை பகுதியான கெங்குவார்பட்டி சோதனை சாவடியில் இ-பாஸ் பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. 
இந்த நிலையில், இ-பாஸ் நடைமுறையை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் வணிகர்கள் இன்று ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் சுமார் 20,000 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.