புதுமணத் தம்பதி கொலை- பெண்ணின் தந்தை கைது!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் குடும்பத்துடன் முருகேசன் நகர் ஒன்றாவது தெருவில் வசித்து வந்துள்ளார். இவரது மகன் மாரி செல்வன் தூத்துக்குடி தனியார் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். தூத்துக்குடி திருவிக நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மகள் கார்த்திகா என்பவரும், மாரி செல்வமும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர , இருவரும் வேறு வேறு சமூகம் என்பதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து கடந்த 30ஆம் தேதி கார்த்திகாவை அழைத்துக் கொண்டு கோவில்பட்டிக்கு சென்ற மாரிசெல்வம் கிழக்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். பின்னர் கோவில்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று காலையில் காதல் தம்பதி தூத்துக்குடி முருகேசன் நகரில் உள்ள மாரி செல்வத்தின் வீட்டுக்கு வந்துள்ளனர். நேற்று மாலை 6 மணி அளவில் மாரி செல்வத்தின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். புதுமண தம்பதியர் இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து மாரி செல்வம் - கார்த்திகா ஆகியோரை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடல்களை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அத்துடன் தூத்துக்குடியில் புதுமணத் தம்பதி கொலை செய்தவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் காதல் திருமணம் செய்த புதுமணத் தம்பதி கார்த்திகா - மாரிசெல்வம் கொலை வழக்கில், கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.