புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னையில் போக்குவரத்து மாற்றம்
2025 ம் ஆண்டு நாளையுடன் விடைபெறுகிறது. நாளை நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறப்பதை ஒட்டி தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சென்னை மாநகரமும் தயாராகி வருகிறது. எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி புத்தாண்டை கொண்டாடுவதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்நிலையில் போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை இணைப்புச் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடற்கரை உட்புறச் சாலையில் டிசம்பர் 31ம் தேதி இரவு 7 மணி முதல் ஜனவரி 1ம் தேதி காலை 6 மணி வரை போக்குவரத்து மூடப்படும். சென்னையில் அனைத்து மேம்பாலங்களும் டிசம்பர் 31ம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 1ம் தேதி காலை 6 மணி வரை மூடப்படும். கடற்கரை உட்புற சாலையில் டிசம்பர் 31ம் தேதி இரவு 7 மணி முதல் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது. அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


