மருத்துவத்துறையில் புதிய மைல்கல்! மனநலம் மற்றும் நரம்பியல் நிலையத்திற்கு ரூ.35 கோடி செலவில் புதிய கட்டடம்!!

பொதுப்பணித் துறையின் மூலம் கீழ்ப்பாக்கம் மனநல காப்பக வளாகத்தில் மனநலம் மற்றும் நரம்பியல் நிலையத்திற்கு ரூ.35 கோடி செலவில் தரைத்தளத்துடன் 6 தளங்கள் கொண்ட புதிய கட்டடம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய அறிவுறுத்தலின்படி கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற வருபவர்களுக்குச் சிறந்த மருத்துவச் சேவையை வழங்குதற்கான நவீன உபகரணங்களுடன் கூடிய புதிய மனநல மற்றும் நரம்பியல் நிலையத்திற்கான ஒப்புயர்வு மையக் கட்டடம் ரூபாய் 35 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என மாண்புமிகு மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் பேரவையில் அறிவித்தார்கள். அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 30.3.2023 அன்று ரூபாய் 35 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்கள். அதன் தொடர்ச்சியாக 24.8.2023 அன்று இக்கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதிய மருத்துவமனைக் கட்டடம் மொத்தம் 88,039 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் 239 படுக்கை வசதிகளுடன் உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தரைத் தளத்தில் கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு, மனநலப் புறநோயாளிகள் பிரிவு நரம்பியல் புறநோயாளிகள் பிரிவு; முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் மூப்பியல் பிரிவு, நரம்பியல் புறநோயாளிகள் பிரிவு, அறிவாற்றல் பழகுமுறை மற்றும் குழந்தைகள் ஆலோசனை அறை போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. மூன்றாம் தளம் உள்நோயாளிகள் பிரிவு, பிரிவு, புலன் உணர்வு அறை, அடிமைத்தன்மை மீட்பு ஆலோசனை அறை, போன்ற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்காம் மற்றும் ஐந்தாம் தளங்கள் நரம்பியல் பிரிவு மற்றும் குழந்தைகள் பிரிவு போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஆறாம் தளத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் இரண்டு அறுவை சிகிச்சை அரங்குகள் போன்ற வசதிகளும் இடம்பெறும்.
மருத்துவத் துறையில் புதிய மைல்கல் !
— TN DIPR (@TNDIPRNEWS) May 22, 2024
பொதுப்பணித் துறையின் மூலம் கீழ்ப்பாக்கம் மனநல காப்பக வளாகத்தில் மனநலம் மற்றும் நரம்பியல் நிலையத்திற்கு ரூ.35 கோடி செலவில் தரைத்தளத்துடன் 6 தளங்கள் கொண்ட புதிய கட்டடம் ! விரைவில் பயன்பாட்டிற்கு வரும் !#CMMKSTALIN | #TNDIPR | @mkstalin pic.twitter.com/sJORScKNup
இக்கட்டடத்தின் அனைத்துத் தளங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிடம், பொதுக் கழிப்பிடம், இரண்டு மின் தூக்கிகள், இரண்டு படிக்கட்டுகள், சாய்வு தளம், மருத்துவ-திரவ ஆக்ஸிஜன் இணைப்புகள், தீயணைப்பு உபகரணங்கள் போன்ற அனைத்து வசதிகளும் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் கட்டமைப்புகளை மேம்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுடைய உத்தரவுப்படி பொதுப்பணித்துறையின் மூலம் தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 4,821 கோடியே 55 இலட்சம் ரூபாய்ச் செலவில் 941 மருத்துவ துறைச் சார்ந்த புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாமல் மருத்துவத் துறையில் மேலும் பல்வேறு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.