திருச்செந்தூர் பாதசாரிகள் கவனத்திற்கு... இரவில் நடக்க வேண்டாம் - அமலாகும் புது ரூல்!

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமலாகிறது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசிய தேவைகள் மற்றும் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ளது. மற்ற நாட்களில் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் மத வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில் நெல்லை மாநகரில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர (கிழக்கு) துணை ஆணையர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் முன்னதாகவே தாங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்து கொள்ள வேண்டும். அதேபோல் இரவு ஊரடங்கு என்பதால் திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் முடிந்தளவு இரவு 10 மணிக்கு மேல் நேரத்தில் பாதயாத்திரை செல்வதை தவிர்க்க வேண்டும்.
கொரனோ பரவலை தடுக்க அரசுக்கு பக்தர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கடந்த ஒருவாரமாகவே நெல்லை மாநகரில் சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிவதை கண்காணித்து வருகிறோம் ஒரு வாரத்தில் விதியை மீறியோர் மீது 5,000 வழக்குகள் போட்டுள்ளோம். இதன் மூலம் அதிகம் பேர் முக்ககவசம் அணிகின்றனர். இதனால் கொரனோ பரவல் குறையும். வணிக நிறுவனங்கள் சானிடைசர் பயன்படுத்துவது உள்ளிட்ட கொரனோ விதிமுறைவளை கடைபிடிக்க வேண்டும் இரவு 10 மணிக்கு ஊரடங்கு தொடங்குவதால் அதற்கு முன்பாகவே வியாபாரிகள் கடைகளை அடைக்க வேண்டும். இரவு 10 மணிக்கு பிறகு எந்தவித நகர்வும் இருக்கக் கூடாது” என்றார்.