நீட் தேர்வு - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று கூடுகிறது!!

 
stalin

நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதில் செய்யப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் முக ஸ்டாலின்  தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடுகிறது.

இளநிலை மருத்துவ படிப்புக்கு நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வரும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கடந்த ஆண்டு செப்.19-ம் தேதி சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இந்த மசோதாவை  குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பாமலேயே வைத்துள்ளார். இதற்கு   ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரண்டு தரப்பும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

neet

அதேசமயம் இதுதொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மறுத்துள்ளார்.  இதனால் நாடாளுமன்ற எம்பிக்கள் அதிருப்தியில்  உள்ள நிலையில்,  நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110வது விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின், ‘‘நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, நாம் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டுவதற்கு சட்டப்பேரவையில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை ஜன.8-ம் தேதி நடத்தமுடிவு எடுத்துள்ளோம். அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

stalin

இந்நிலையில் அனைத்து கட்சி கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.30 மணியளவில் தலைமை செயலகத்தில் கூடுகிறது.  இதில் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் குழு தலைவர்கள் பங்கேற்கின்றனர். நீட் தேர்விலிருந்து  தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவது குறித்தும்,  எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.  இக்கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு  நீட் தேர்வு குறித்த அவசியத்தை பேசுவார் என்று அக்கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.