“தவெக தலைவர் விஜயா? பிரசாந்த் கிஷோரா? விஜய் எங்கே என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் இருக்கிறார்”- நாஞ்சில் சம்பத்

த.வெ.க துவங்கிய இடத்திலேயே நிற்கிறது, அது நிற்குமா என்பது போகப் போகத்தான் தெரியும் என நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.
இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி உள்ளிட்டவற்றை கண்டித்து இராமநாதபுரம் அரண்மனை பகுதியில் திமுக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிட இயக்க தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசும் போது, மும்மொழிக் கொள்கையை திணிக்க நினைக்கும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார், தமிழக அரசு கோரிய எந்தவித நிவாரணமும் வழங்காமல் மாற்றாந்தாய் பிள்ளையாக கருதி வருகிறது என்பதை சுட்டி காட்டினார். பேரழிவு பாதிப்புக்கு கூட முதல்வர் கேட்ட நிதியை முழுமையாக கொடுக்கவில்லை எனக்கூறிய அவர், மாணவர்களுடைய கல்விக்கு கூட நிதி வழங்க முடியாது எனக்கூறி ஹிந்தியை தினிக்க பார்க்கிறார்கள், அண்ணன் மு.க ஸ்டாலின் இருக்கும் வரை எப்போதுமே முடியாத காரியம் என்றார். மேலும் தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கடுமையாக விமர்ச்சித்தார்
பின் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், “விளையாட்டுத்துறை ஒரு விளையாட்டாக இருந்த நேரத்தில், விளையாட்டு துறையும் இயங்க வேண்டிய ஒருவர், கையில் இருந்தால் அதற்கும் உயிரூட்ட முடியும் என்பதை உதயநிதி இன்று நிருபித்து வருகிறார். நாடு முழுவதும் அடுத்த தலைமுறைக்கு திமுகவில் பேசுவதற்கு 200 பேச்சாளர்களை உருவாக்கியுள்ளார். நாடாளு மன்றத் தேர்தலில் ஒரு பிரச்சார யுத்திக்கு தலைமை தாங்கி 40 தொகுதிகளிலும் திமுக வென்றெடுத்ததற்கு உறுதுனையாக இருந்தவர் தம்பி உதயநிதி. அண்ணாமலை ஒரு அரைவேக்காடு, அவர் ஐபிஎஸ் படித்த ஒரு பட்டதாரியா? என சில வேளையில் எனக்கு சந்தேகம் எழுகிறது. அண்ணாமலை சொல்வது போல திமுக மன்னர் ஆட்சி இல்லை, வின்னர் ஆட்சி. ஜெயலலிதா காலம் வரை ஆளுங்கட்சி தான் இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று வந்தது. ஆனால் அண்ணன் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அதிகாரத்திலிருந்த அதிமுகவிடம் இருந்து 23 தொகுதிகளில் 13 தொகுதிகளை வென்றெடுத்து மிகப்பெரிய சாதனையை படைத்தவர் அண்ணன் மு.க ஸ்டாலின்
இப்போது த.வெ.க கட்சியின் தலைவர் விஜய்யா, அல்லது பிரசாந்த் கிசோரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எங்கே என்ன நடக்கிறது என்ற விபரம் தெரியாமலேயே விஜய் இருக்கிறார், அவர் கட்சி, தொடங்கிய இடத்திலேயே நிற்கிறது. அது தொடர்ந்து நிற்குமா என்பது போக,போக தெரியும்” என்றார்