“DPI அலுவலகத்தின் 2-வது மாடியில் லஞ்சம் வாங்க தனி அறை! ரூ.400 கோடி வரை லஞ்சம்”- திமுக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு
கடந்த திமுக ஆட்சியில் கல்வித்துறையில் லஞ்சம் புரையோடி போயிருந்ததாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது.

கடந்த காலங்களில் பள்ளிக்கல்வித் துறையில் பள்ளிகளுக்கு "NOC" வழங்குவதற்கும், "Yearly Renewal" செய்வதற்கும் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது தவெக ஆட்சியில், எந்தவித லஞ்சமும் இல்லாமல் இந்த அனுமதிகள் வழங்கப்படுகின்றன என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் சங்கத்தின் பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறியிருந்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் சங்கத்தின் பொதுச்செயலாளர் நந்தகுமார் அளித்துள்ள பேட்டியில், “கடந்த திமுக ஆட்சியில் சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்திலும், DPI அலுவலகத்தின் 2-வது மாடியிலும் லஞ்சம் வாங்க தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. சென்னை தி.நகரில் உள்ள குளோபல் 360 என்ற நிறுவனத்தில் லஞ்சம் பெறப்பட்டது. மெட்ரிக் பள்ளி புதுப்பித்தலுக்கு ரூ.3- 5 லட்சம் வரையிலும், CBSE பள்ளி ஒன்றின் புதுப்பித்தலுக்கு ரூ.10 - 15 லட்சம் வரையிலும், ஒரு பள்ளிக்கு தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக ரூ.50 லட்சமும் லஞ்சம் வாங்கினர். தமிழ்நாடு வரலாற்றில் ஒரு CBSE பள்ளிக்கு பணம் இல்லாமல் அங்கீகாரம் கொடுத்த வரலாறே கிடையாது.
கடந்த திமுக ஆட்சியில் பள்ளிகள் புதுப்பித்தலுக்காக மட்டும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.400 கோடி வரை லஞ்சமாக பெறப்பட்டுள்ளது. மேலும் நந்தகுமாரின் குற்றச்சாட்டின் அடிப்படையில் பார்த்தால் ஆண்டிற்கு பல நூறு கோடி லஞ்சமாக வாங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் லஞ்சம் வாங்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், “லஞ்சம் பெற்றது தொடர்பாக புகார் அளித்தால் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

