ஜெயில்லையே வாழ்க்கையை முடிச்சிக்கனும்னு பல முறை நினைச்சேன்.. - நளினி உருக்கம்..

 
 nalini

32 ஆண்டுகள் சிறைவாசம் பல பாடங்களை கற்றுத் தந்துள்ளது என்றும், சிறையிலேயே வாழ்க்கையை முடிச்சுக்கனும்னு பல நேரம் தோன்றியதாகவும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு  விடுதலை செய்யப்பட்டுள்ள  நளினி மற்றும் அவரது வழக்கறிஞரும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நளினி, “மத்திய, மாநில அரசுகளுக்கும், தமிழக மக்கள் எங்கள் மீது செலுத்திய அன்பிற்கும் நன்றி. சிறையில் இருந்தாலும் என் குடும்பத்தினரின் நினைவில்தான் வாழ்ந்தேன். இந்த வழக்கில், கைதான நாளிலிருந்து, விடுதலை அடைவோம் என்ற நம்பிக்கை இருந்தது. விரைவில் சிறையிலிருந்து வெளியே செல்வோம் என்று எண்ணிய நேரத்தில், தூக்கு தண்டனை என்ற தீர்ப்பு வந்தவுடன் வாழ்க்கையை முடித்து கொள்ள வேண்டுமென பல முறை நினைத்தேன்.

nalini

முதல்வர் சந்திக்க நினைத்தால் நிச்சயம் அவரை நேரில் சந்தித்து நன்றிகளை தெரிவிப்போம். பிரியங்கா காந்தி சிறையில் என்னை சந்தித்த போது, அவரது தந்தை இறப்பின் காயம் குறித்து மனம் விட்டு பேசி கண்கலங்கினார். சம்பவ இடத்திற்கு சென்றதாக மட்டுமே என்மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டேன். ஆனால் கைதான முதல் நாளிலிருந்தே தூக்கு தண்டனை கைதி போலவே நடத்தப்பட்டேன்.

மருத்துவர்கள் பிரசவம் பார்க்க முடியாது என்று கூறிய பின்னரே, சிறையின் கதவை திறந்தனர். அதுவரையில் 24 மணி நேரமும் சிறையின் கதவை திறக்கவில்லை. பிரதமரின் இறப்பு ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம். குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் நான் இல்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 32 ஆண்டுகள் சிறைவாசம் பல பாடங்களை கற்று தந்தது. சிறையிலிருந்து வெளிவர மேலும் சிறிது காலம் ஆகும் என்று நினைத்த நேரத்தில், வெளியே வந்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக என் கணவர் தெரிவித்தார்.

நளினி

சிறையில் இருந்த 32 ஆண்டுகளில் நான் எந்த தவறும் செய்ததில்லை. சிறையில் இருந்த நேரத்தில் பல தடைகளுடனே 6 ஆண்டு உயர்கல்வி படித்து முடித்தேன். சிறையில் இருந்தபோது தையல், ஓவியம், சேலை வடிவமைப்பு, கைவினை பொருட்கள் செய்வது, போன்ற பல சுய தொழில்களை கற்றுக்கொண்டேன். ஒரு மாத காலம் சிறை விடுப்பு (பரோல்) வழங்கிய முதல்வருக்கு நன்றி. மேலும் அகதிகள் முகாமில் உள்ள எனது கணவரை மீட்டெடுக்க முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளேன். அனைவரும் உதவி செய்ய வேண்டும்.  காந்தி குடும்பத்தினரை பார்ப்பதற்கு எனக்கு தயக்கமாக இருக்கிறது. அவர்கள் தங்களின் தந்தையை இழந்திருக்கிறார்கள். அதனால் தான் நான் சிறையில் இருந்தேன். அந்த ஒரு குற்ற உணர்ச்சியால் தான் பார்க்க வேண்டாம் என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.