"நான் ஏமாற்ற மாட்டேன், என்னை நம்புங்கள், நான் நினைத்திருந்தால் பேரம் பேசியவர்களை நாடி சென்றிருக்க மாட்டேனா?"- சீமான்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு நாம் தமிழர் கட்சியின் உசிலம்பட்டி தொகுதி வேட்பாளர் அபிராமி-யை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய சீமான், “நீண்ட காலமாக இந்த நாட்டில் நடக்கும் அரசியல் பொறுக்க முடியாமல் கொதித்து எழுந்த தமிழ் பிள்ளைகள் நீங்கள். இந்த மண்ணில் வெள்ளையர்கள் அடக்கி ஆண்ட போது, தென் மாநிலத்தில் வரும் போது தயக்கம் ஏற்பட்டது. போர் குணங்கள் கொண்ட சமூகங்கள் எது எது என கண்டறிந்து குற்றப்பரம்பரை சட்டத்தை கொண்டு வந்தான். வரலாற்றில் மறக்கப்பட்ட ஒன்று ஜாலியன் வாலாபாக் இன்றும் படிக்கிறோம். எங்கள் மண்ணில் பெருங்காமநல்லூரில் வெள்ளையன் சுடுவான் என தெரிந்தே போரிட்டு மாய்ந்தோம். சுடுவான், சாவோம் என தெரிந்து போராடி மாண்ட எங்களை வரலாற்றில் பதிவு செய்யவில்லை, புத்தகத்தில் கூட இல்லை.
எந்த இடத்தில் கைரேகை சட்டத்திற்காக கைது செய்து அடைத்து வைத்திருந்தானோ, அந்த இடத்தில் கல்வியை உருவாக்கிட கல்லூரியை கட்டி கொடுத்தவர் பி.கே.மூக்கையாத்தேவர். பாலை விற்பது போல ஒரு நாள் தண்ணீரை விற்பார்கள் என அன்றே சொன்னார். இன்று பால் விலையை விட தண்ணீர் விலை அதிகமாகிவிட்டது. இதே போன்று அன்றே கணித்தார். ஒரு நாள் வள்ளலார் திருவருள் பெற்ற ஒரு மகன் வருவான், அவன் அரியணையில் ஏறும் போது என் அண்ணை தமிழ் அரியணை ஏறும் என்று சொல்கிறார். என் தாத்தாக்கள் கணித்து வைத்தது நடந்ததோ. அதே போன்று கடைசியாக அவர்கள் கணித்ததும் நடக்கும். இந்த திமுகவிற்கும், அதிமுகவிற்கும் இன்று வரை உசிலம்பட்டி 58 கால்வாய் பிரச்சனையை தீர்க்க துப்பு இல்லை. இதே உசிலம்பட்டியில், ஆண்டிபட்டியில், தேனியில், நீ வாழும் ஊரில் படித்தவன், படிக்காதவன் என எல்லோருக்கும் அரசு வேலை தருவேன், படிக்காதவனே இல்லை என்பதை உருவாக்குவேன், வேளாண்மை செய்து என் பிள்ளைகளுக்கு வருவாயை பெறுக்குவேன், டாஸ்மாகை மூடிவிட்டு கள்ளுக் கடையை திறப்பேன். என் குலதெய்வம் மீது ஆணையிட்டு சொல்கிறேன், நான் ஏமாற்ற மாட்டேன், என்னை நம்புங்கள், நான் நினைத்திருந்தால் பேரம் பேசியவர்களை நாடி சென்றிருக்க மாட்டேனா? ஓட்டுக்கு காசு கொடுப்பவனும், இலவசம் கொடுப்பவனும் ஏமாற்றுகிறான் என தெரியவில்லையா? உன் வீட்டை திருட வந்தவன் 2 ஆயிரம் கொடுத்துவிட்டு கொள்ளையடித்து செல்வான். எல்லாவற்றுக்கும் நல்லதை, நல்ல கடையை தேர்ந்தெடுக்கும் மக்கள், நல்ல தலைவனையும் தேர்ந்தெடுங்கள். வாக்கு செலுத்த போகும் போது தெய்வமாக நிற்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரையும், பி.கே.மூக்கையாத்தேவரின் முகத்தை பார்த்துவிட்டு வாக்களிக்க செல்லுங்கள். திருடர்களிடத்தில் ஒப்படைக்க மனம் வராது. தமிழ்நாட்டில் இளம் வயது வேட்பாளர் என் மகள் அபிராமி. காங்கிரஸ் கையை விடுங்கள் என் மகளின் கையை பற்றுங்கள். உசிலம்பட்டியிலிருந்து ஒரு வரலாற்று மாற்றத்தை உருவாக்குங்கள்” என்றார்.



