அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 10 பேர் கைது

 
ச் ச்

திருக்கோவிலூரில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.


தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் அரசு போக்குவரத்து கழகம் என பெயர் எழுதப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பின்பற்றுவது போன்று பேருந்துகளில் மாநிலத்தில் பெயர் இடம்பெறும் விதமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என பெயர் எழுதி இயக்கப்பட வேண்டும் என சில அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நகராட்சி பேருந்து  நிலையத்திற்கு , நாம் தமிழர் கட்சியின்  10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வந்தனர். பின்னர் அவர்கள் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த, அரசு பேருந்துகளில், அரசு போக்குவரத்து கழகம் என எழுதப்பட்டிருந்த இடத்தில் தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஓட்டி திமுக, அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் பேருந்து நிலையத்தில் பேருந்துகளை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.


இதையறிந்த திருக்கோவிலூர் ஆய்வாளர் பாலகிருஷ்ணன்  தலைமையில்  30 க்கும் மேற்பட்ட போலீசார் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர். போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது,