மர்மமான முறையில் கணவர் மரணம்... மனவேதனையில் உயிரை விட்ட மனைவி - ஒரு குழந்தையுடன் தவிக்கும் குடும்பம்..!

 
1 1

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கலியடி பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாரன் (38). நர்சிங் முடித்திருந்த இவர், இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் 80 வயது மூதாட்டி ஒருவரைப் பராமரிக்கும் 'கேர் கிவ்வர்' (Caregiver) பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஜூலை மாதம், சுகுமாரன் தான் பணியாற்றி வந்த வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அதிர்ச்சிகரமாக, அவர் பராமரித்து வந்த மூதாட்டியும் அதே நேரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

கணவரின் மறைவுச் செய்தியைக் கேட்டு அவரது மனைவி ரேஷ்மா (32) நிலைகுலைந்து போனார். கடந்த புதன்கிழமை சுகுமாரனின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், கணவரின் இழப்பைத் தாங்க முடியாத ரேஷ்மா கடும் மன உழைச்சலுக்கு ஆளானார். இதற்காக அவர் மனநல சிகிச்சையும் பெற்று வந்தார்.

இந்நிலையில், தீராத மனவேதனையில் இருந்த ரேஷ்மா தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்ட குடும்பத்தினர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இஸ்ரேலில் கணவர் தற்கொலை செய்த சில மாதங்களிலேயே, கேரளாவில் மனைவியும் உயிரை மாய்த்துக் கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.