“நாம் தமிழர் கட்சி பிஜேபி ‘பி’ டீம் என்பது சரிதான்”- கட்சியில் இருந்து விலகிய நாதக நிர்வாகி பேட்டி

நாம் தமிழர் கட்சியை நம்பி தங்களது இளமைக்காலமும் பொருளாதாரம் வீணாகப் போனது என நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய தம்பிகள் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில, மாவட்டம், நகரம், வட்டம் என பல்வேறு பொறுப்புகளில் இருந்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர். குறிப்பாக அம்பத்தூரில் இருந்து மாநில கொள்கைப்பரப்பு செயலாளர் தமிழரசன், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற மண்டல செயலாளர் மகேந்திரன், அம்பத்தூர் மேற்கு பகுதி செயலாளர் அஜ்மல் அகமது, அம்பத்தூர் மேற்கு செய்தி தொடர்பாளர் ராஜ்குமார், அம்பத்தூர் துணை தலைவர் முருகன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து வெளியேறினர்.
இந்த நிலையில் கட்சியில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சி தம்பிகள் தங்களது குமுறல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அதில் நாம் தமிழர் கட்சித் ஒருங்கிணைப்பாளர் சீமான், சங்பரிவார் சித்தாந்தத்துடன் செயல்படுவதாகவும், பிஜேபி பி டீமாக செயல்படுவதால் தமிழ் தேசிய அரசியலை நம்பி வந்த நாங்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி உள்ளோம் என்று தெரிவித்தனர். மேலும் பல ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியை நம்பி தங்களது இளமைக்காலமும் பொருளாதாரம் வீணாகப் போனது என்று தெரிவித்தார்கள். வாரிசு அரசியல் என திராவிட கட்சிகளை குற்றம் சாட்டும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், கட்சியில் வாரிசு அரசியலை தான் எடுத்து வருகிறார் என்றும் அதற்கு ஒரு உதாரணம் அம்பத்தூரில் பல்வேறு பொறுப்புகள் தந்தை மகனுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். தமிழ் தேசிய அரசியலை எதிர்பார்த்து நாம் தமிழர் கட்சிக்கு சென்றால் அங்கு ஏமாற்றம்தான் கிடைக்கும் என்றும் இது இலை உதிர் காலம் இலைகள் உதிரத்தான் செய்யும் என்ற சீமான் கூறியுள்ளார். தாங்கள் அனைவரும் கட்சியின் ஆனி வேர் நாங்கள் நாங்கள் இல்லாமல் கட்சி ஒன்றுமில்லை என தெரிவித்தனர்.