"கையில் பிரேக் போடலாம், பேருந்து தீப்பற்றி எரிந்தால் ஒவ்வொரு சீட்டிலும் தண்ணி அடிக்கும்”- S.E.T.C-யின் புதிய சொகுசு பேருந்து
போக்குவரத்து துறை வரலாற்றில் முதன் முறையாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் கொள்முதல் செய்துள்ள 20 மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகள், டிசம்பா் மாதம் முதல் வாரத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளை தனியாா் ஆம்னி பேருந்துகளுக்கு நிகராக தரம் உயா்த்தும் நடவடிக்கையைப் போக்குவரத்துத் துறை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் 2025-2026-ஆம் நிதியாண்டுக்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 130 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்துள்ளது. இந்தப் பேருந்துகளைக் கட்டமைக்கும் பணி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இவற்றில் 110 பேருந்துகள் குளிா்சாதன வசதியில்லாத இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்டது. எஞ்சிய 20 பேருந்துகளும் இருக்கை வசதி கொண்ட மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகள் ஆகும். இந்த 20 சொகுசு பேருந்துகளும் விரைவில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இணைக்கப்படவுள்ளன. இதன் முதல் கட்டமாக பெங்களூரில் இருந்து 8 மல்டி ஆக்சில் சொகுசு பேருந்து தற்போது அரசு விரைவு போக்குவரத்து கழக சென்னை பணிமனைக்கு வந்துள்ளது.
மல்டி ஆக்சில் பேருந்துகளின் சிறப்பம்சங்கள்:
மல்டி ஆக்சில் பேருந்தின் நீளம் 15 மீட்டராக உள்ளது. இதில் 14 மீட்டர் பேருந்தின் கீழ் தளத்தில் பொருட்கள் வைப்பதற்கான பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 51 பயணிகள் இருக்கை உள்ளது. எல்இடி விளக்குகள் படிகள் மற்றும் பேருந்து முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. திரையரங்கில் அமைக்கப்படுள்ள வகையில் சரிவு வகையான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேருந்தின் இரண்டு இடங்களில் கொடுக்கப்பட்டுள்ள திரையில் ஒளிபரப்பப்படும் காட்சிகளை தெளிவாக பயணிகளால் காண முடியும். அவசரகால பட்டன்கள், செமி ஸ்லிப்பர் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து இருக்கைகளில் மற்றொரு சிறப்பம்சமாக முழங்கால்கள் வரை கால்களை இருக்கையில் வைக்கும் வகையில் நீளமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் காலில் மட்டுமில்ல கையாலையும் பிரேக் போடலாம்.
கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்தில் ஏதேனும் அசம்பாவிதம் மற்றும் தீ விபத்துக்கள் ஏற்பட்டால் அவசர வழி ஒவ்வொரு ஜன்னலுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.அது போல் பேருந்தின் உள்ளேயே தண்ணீர் தெளிப்பான்களுக்கான குழாய்கள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளது. சார்ஜிங் வசதிகள், ரீடிங் லைட், வயதானவர்கள்,மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் எளிதில் ஏறி இறங்கும் வகையில் பேருந்தின் உயரத்தையும் ஏற்றி இறக்க இதில் முடியும். பிரத்யேக பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வசதிகள் இந்த பேருந்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.இந்த பேருந்தின் விலை என்பது ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது.

