நிலமோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்..

 
vijayabaskar


நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் விதித்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் வீடு, நிறுவனங்கள் மற்றும் அவரது ஆதாரவாளர்களின் இல்லங்களிலும் சிபிசிஐடி போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.  கடந்த 5, 7 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெற்ற இந்த சோதனையின் போது எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனைவி விஜயலட்சுமியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் பலர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.  இதனைத்தொடர்ந்து  5 வாரங்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான பிரவீன் ஆகியோரை கடந்த 16ம் தேதி சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூரில் அவர்கள் தலைமறைவாக இருந்தது தெரியவந்ததை அடுத்து அவரை கைது செய்து,  கரூர் சிபிசிஐடி அலுவலத்தில் வைத்து விசாரணை நடத்தி பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். 

நிலமோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்.. 

அதன்பின்னர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையிலும், பிரவீன் குளித்தலை கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.  இந்த நிலையில் நிலமோசடி வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீஸார் கரூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் மனுவை விசாரித்த நீதிபதி பரத்குமார், 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்தார். இதனையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் காந்தி கிராமம் சின்னப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.