"தொகுதி மறுவரையறை எதுக்கு? பாஜகவின் திட்டம் இதுதான்"- எம்பி செல்வ கணபதி பரபரப்பு பேட்டி

மக்களவை தொகுதி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என திமுக எம்பி செல்வகணபதி கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி செல்வகணபதி, “நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவின் பிரதிநிதித்துவம் குறையும். பாஜகவின் வீழ்ச்சிக்கு தமிழ்நாடு மட்டுமே காரணமாக உள்ளது. மக்களவை தொகுதி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் கூடுதல் தொகுதிகளைப் பெறும். தொகுதி மறுவரையறை செய்தால் 4 மாநிலங்களுக்கு மட்டும் தொகுதி எண்ணிக்கை 274 ஆக அதிகரிக்கும். தொகுதி மறுசீரமைப்பால் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்கள் மட்டுமே பயன்பெறும்.
4 மாநிலங்களில் தொகுதிகளை அதிகரிப்பதன் மூலம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என பாஜக திட்டமிட்டுள்ளது. வெறும் 10 மாநிலங்களை வைத்து ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருக்கலாம் என பாஜக திட்டம் போடுகிறது. தென் மாநிலங்களில் பாஜக தோல்வி அடைந்தாலும், வடமாநிலங்களை வைத்து ஆட்சி அமைக்க முடியும். ஒன்றிய பாஜக அரசு எதையும் வெளிப்படையாக மேற்கொள்ளாது” எனக் குற்றஞ்சாட்டினார்.