வாகன ஓட்டிகள் ஷாக்..! சுங்கச்சாவடி கட்டணம் 4 மாதங்களில் 2வது முறையாக உயர்வு..!
சென்னையில் உள்ள பிரதான சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணத்தை உயர்த்தி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய கட்டண உயர்வு, அமலுக்கு வந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
குறிப்பாக, சென்னை பை - பாஸ் சாலையில் அமைந்துள்ள வானகரம் மற்றும் சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில், அனைத்து வகை வாகனங்களுக்கான சுங்கக்கட்டணம், 5 முதல் 15 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த நான்கு மாத இடைவெளிக்குள், இரண்டாவது முறையாக சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே எரிபொருள் விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால், மக்கள் சிரமப்படும் வேளையில், சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டணத்தை உயர்த்தியிருப்பது, நடுத்தர குடும்பங்களையும், வாடகை கார் ஓட்டுநர்களையும் கடுமையாகப் பாதிக்கும் என, லாரி மற்றும் டாக்ஸி உரிமையாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு வழங்கப்பட்ட, ஒரு முறை கட்டணக் குறைப்பு ரத்து செய்யப்பட்டு, பல தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில், கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. மே மாதத்திற்கு பின், இது இரண்டாவது கட்டண உயர்வாகும்.
இதனால், வாகனங்களுக்கு ஏற்ப, 5 ரூபாய் முதல், அதிகபட்சமாக 30 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு, அனைத்து சுங்கச்சாவடிகளிலும் படிப்படியாக அமலுக்கு வரும். அதுபோல், சுங்கச்சாவடியில் இருந்து, 20 கி.மீ., சுற்றளவில் வசிக்கும் தனியார் வாகன உரிமையாளர்களுக்கான, மாதாந்திர பாஸ் கட்டணம் 350 ரூபாயில் இருந்து 360 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

