ஒரே மேடையில் மோடி - எடப்பாடி! மதுரையில் மெகா பொதுக்கூட்டம்..!
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பாமக (அன்புமணி அணி), தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், சில கட்சிகள் கூட்டணியில் இணையும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அ.தி.மு.க.வில் இன்னும் கூட்டணியே இறுதி செய்யப்படாத நிலையில், அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய கட்சியான பா.ஜ.க., தொகுதி பங்கீட்டிற்கு சென்றுவிட்டது. அக்கட்சி 56 தொகுதிகளையும், ஆட்சியில் பங்கும் கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால், அ.தி.மு.க.வோ 30-க்கு மேல் தொகுதிகள் தர முடியாது, ஆட்சியிலும் பங்குதர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில்தான் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். ஆனால், அவர் பா.ஜ.க.வுக்கான தொகுதி ஒதுக்கீடு 50-க்கும் குறையக்கூடாது என்று கறாராக சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய அவர், இம்மாதம் இறுதியில் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். பா.ஜ.க.வுக்கான தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதை இப்போது சொல்ல முடியாது என்று கூறினார்.
ஏற்கனவே, பாமகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதனால், அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதிகளை இறுதி செய்வதற்காக விரைவில் பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் பியூஷ் கோயல் தமிழகம் வர இருக்கிறார். அதனைத் தொடர்ந்து, வருகிற 23-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பிரதமர் நரேந்திரமோடி மதுரை வர இருக்கிறார். அன்றைய தினம் மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள அம்மா திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்பட தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த கட்சி தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது. மொத்தத்தில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.


