சென்னையில் 3வது நாளாக மிதமான மழை..

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மூன்றாவது நாளாக மழை பெய்தால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மூன்றாவது நாளாக இன்று அதிகாலை நேரத்தில் கோடை மழை பெய்தது. பெரும்பாலான பகுதிகளில் நள்ளிரவு முதலே அதிகாலை வரையில் மிதமான மழை பெய்தது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதேபோன்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், தா.பழுவூர் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்தது. திருப்பூர் மாவட்டம் அவினாசி, ஆட்டியப்பாளையம், சேவூர் பகுதிகளிலும், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, ராஜபுரம் உள்ள இடங்களிலும் மழை கொட்டி தீர்த்தது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், வடச்சூர், கரட்டூர், வடுகபாளையம் ஆகிய இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் வாழை மரங்கள் சாய்ந்தன. மேலும், திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, நிலக்கோட்டை, கொடைக்கூடு, பள்ளப்பட்டி, சிலுக்குவார்பட்டி ஆகிய இடங்களிலும் பலத்த மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கொட்டி தீர்த்தமலையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்தனர்.