ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கமலிடம் ஆதரவு கோரப்படும் - கே.எஸ்.அழகிரி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஆதரவு கோரப்படும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா உயிரிழந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறது. இத்தொகுதியில் வேட்பாளராக மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவை கேட்க உள்ளோம். தொலைபேசி மூலம் கமல் ஹாசனுடன் தொடர்பு கொண்டு ஆதரவு கோரப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.