2026-லும் திராவிட ஆட்சிதான்! தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு OUT OF CONTROL-தான்: மு.க.ஸ்டாலின்

 
MKstalin MKstalin

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1166 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரோட் ஷோ நடைபெற்றது. வாகனத்தில் இருந்து இறங்கி சாலையில் நடந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையின் இரு புறங்களிலும் திரண்டு நின்ற பொதுமக்கள் உற்சாகமாக கைகுலுக்கி வரவேற்பு தெரிவித்து முதலமைச்சருடன் பொதுமக்கள் செல்பியும் எடுத்து உற்சாகமடைந்தனர். தொடர்ந்து பொதுமக்கள் முதலமைச்சரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவினையும் அளித்தனர். திட்டமிட்ட தூரத்தை தாண்டி 1.5 கிமீ தூரத்திற்கு முதலமைச்சர் சாலையில் நடந்து பின்னர் வாகனத்தில் ஏறி விழா மேடைக்கு சென்றார். 


இந்நிலையில் இன்று தான் கலந்துகொண்ட நிகழ்ச்சி குறித்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு! தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது நுழைந்து இந்த மண்ணைப் பாழாக்கத் துடிக்கும் பா.ஜ.க.வுக்கும், அதற்குத் துணைபோகும் இனமானம் இல்லாத அடிமைகளுக்கும் தமிழ்நாட்டின் நுழைவு வாயிலான திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சவால் விடுகிறேன்… எத்தனை ஏவல் அமைப்புகளை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்து வாருங்கள்! 2026-லும் #DravidianModel ஆட்சிதான்! தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு OUT OF CONTROL-தான் #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.