அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி- முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

 
mkstalin

நாகர்கோவில் அருகே அரசுப்பேருந்து- கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்துள்ளார். 

mks-talin-4

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், செண்பகராமன்புதூர் கிராமம், லாயம் விலக்கு பகுதியில் இன்று (12-5-2023) காலை நாகர்கோவிலில் இருந்து ரோஸ்மியாபுரம் சென்ற பேருந்தும், திருச்செந்தூரிலிருந்து நாகர்கோவில் வந்த நான்கு சக்கர வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சதிஸ், த/பெ.ராமசாமி, கைதக்குழி காலனி, திருவிதாங்கோடு (வயது-37), கண்ணன், த/பெ.ராஜன் சிதறால் அருமனை (வயது-23) அஜித், த/பெ.சதிஸ்குமார், அம்பங்காலை, திருவரம்பு (வயது-22) மற்றும் அபிஷேக், த/பெ.பீர்கன், குழிச்சாணி, அருமனை (வயது-22) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டுமிகுந்த வேதனையடைந்தேன்.


மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சஜிதா, நெய்யாற்றின்கரை, கேரளா மாநிலம் (வயது-37), நிதிஸ் த/பெ.இராமசாமி, அம்பாங்காலை திருவரம்பு (வயது-22), விக்னேஸ், த/பெ.ஜெனில்குமார், காளச்சந்தை, மார்த்தாண்டம் (வயது-22), நிசாந்த், த/பெ.இராமசாமி, அம்பாங்காலை திருவரம்பு (வயது-18), சஜின் த/பெ.சஜிஸ்பாபு, கள்ளிக்கோட்டை சிதறால் (வயது-18) மற்றும் சிறுமி அனாமிகா, நெய்யாற்றின்கரை, கேரளா மாநிலம் (வயது-11) ஆகியோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

நாகர்கோவில் விபத்து

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், படுகாயமடைந்த தீவிர சிகிச்சை பெற்று வரும் ஆறு நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.