கட்டிட மேற்கூரை இடிந்து சிறுவன் பலி- முதல்வர் நிதியுதவி அறிவிப்பு
கடலூர் மாவட்டம் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மருதத்தூர் கிராமத்தில் உள்ள கோவிலில் இன்று (10-9-2023) காலை கும்பாபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள கட்டிடத்தின் வெளிப்புற மேற்கூரை எதிர்பாராதவிதமாக ஸ்ரீமுஷ்ணம் வட்டம், காவனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி.சுதந்திரதேவி, த/பெ. மணிகண்டன் (வயது 15) என்பவர் மீது இடிந்து விழுந்ததில், அவருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.
உயிரிழந்த செல்வி.சுதந்திரதேவியின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.