10,000 தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
mkstalin

திராவிட மாடல் அரசு என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசு, பாடுபடும் பாட்டாளிகளுக்கான அரசு, உழைக்கும் தொழிலாளர்களுக்கான அரசு என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களுக்கும் எனக்கும் எப்போதும் நட்பு உள்ளது; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தொழிலாளர் முன்னேற்றச் சங்க பேரவையின் 25வது பொதுக்குழு மற்றும் பொன்விழா மாநாடு நிறைவு நாள் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின்  கலந்து கொண்டு உரையாற்றினார். 

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “இந்த ஆண்டு மே நாள் நூற்றாண்டை கொண்டாடி இருக்கிறோம். உழைக்கின்ற மக்கள், அடித்தட்டு மக்களுக்காக  சாதிய ரீதியாக அடக்கப்பட்ட மக்கள் அனைவரும் தொழிலாளர்கள் தான் என்று சொன்னவர் தந்தை பெரியார். அதனால்தான் திராவிட விவசாய தொழிலாளர் சங்கம் என்று அமைப்பை தொடங்கினார். தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை என்னும் அமைப்பை 1970 ஆம் ஆண்டு கலைஞர் துவக்கி வைத்தார். திமுக ஆட்சியில் மே 1ஆம் தேதி ஊதியத்தோடு கூடிய பொது விடுமுறை நாளாக அறிவித்து சட்டம் இயற்றப்பட்டது. இது திமுக தலைவர் கலைஞரின் ஆட்சியில் மகத்தான சாதனைகளில் ஒன்று. தொழிலாளர்களுடன் எப்போதும் எனக்கு நட்பு கலந்த மோதல் உள்ளது. ஊடலும் உள்ளது. மோதலும் உள்ளது. திராவிட மாடல் அரசு என்பது பாட்டாளி மக்களுக்கான அரசு, உழைக்கும் மக்களுக்கான அரசு. 

அதே போல் அவசர சட்டம் பிறப்பித்து வேளாண் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்கியதும் திமுக ஆட்சியில் தான். மேலும் பீடி தொழில், பனியன், நெசவு, தோல் பதனிடுதல், செங்கல் சூளை ஆகிய இடங்களில்  வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க பலம் இல்லாததால் போதிய ஊதியம் வழங்கப்படாமல் அல்லல்பட்டு வந்த நிலைகள் உண்டு. அங்குள்ளவர்களிடம் பேசி குறைந்தபட்ச ஊதியம் கிடைக்க வழிவகை செய்ததும் திமுக அரசு தான். கட்டுமான தொழிலாளர் நல வாரியம் விவசாய தொழிலாளர் நல வாரியம்,மீனவர் நல வாரியம், பூசாரிகள் நல வாரியம் பல்வேறு நல வாரியங்களை திமுக அரசு தான் கொண்டுவரப்பட்டது.

இந்த திமுக அரசு பொறுப்பேற்ற இரண்டு ஆண்டு காலத்தில் 6,71,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 25-க்கும் மேற்பட்ட தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தினை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 10,000 தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.