பாஜக கூடவே இருந்து அவர்களுக்கு ”ஆமா சாமி” போட்டவர்தான் பழனிசாமி- மு.க.ஸ்டாலின்

 
MKStalin

பா.ஜ.க கூடவே இருந்து அவர்களின் மக்கள்விரோதச் செயல்கள் எல்லாவற்றுக்கும் “ஆமா சாமி” போட்டவர்தான் பழனிசாமி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ‘மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்’ பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பா.ஜ.க.வின் தோல்விகளை நான் பட்டியலிட வேண்டும் என்றால், 2014-இல் 414 ரூபாயாக இருந்த சமையல் சிலிண்டர் விலை  இப்போது 918 ரூபாய். 72 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் இப்போது 102 ரூபாய். 55 ரூபாயாக இருந்த டீசல் இப்போது 94 ரூபாய். இப்படி அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தையும் பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். இவ்வளவு நாட்களாக பா.ஜ.க கூடவே இருந்து அவர்களின் மக்கள்விரோதச் செயல்கள் எல்லாவற்றுக்கும் ”ஆமா சாமி” போட்டவர்தான் பழனிசாமி. பா.ஜ.க.வின் பாதம்தாங்கியாக பவனி வந்தார். தமிழ்நாட்டின் உரிமைகள் அனைத்தையும் டெல்லியில் அடகு வைத்தார். தன்னுடைய நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதிலேயே நான்கு ஆண்டுகளை ஓட்டிவிட்டார்.

பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்துக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும், மூன்று வேளாண் சட்டங்களையும் ஆதரித்தார். நீட் தேர்வைத் தமிழ்நாட்டுக்குள் நுழையவிட்டார். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை ஒரே நாளில் யூனியன் பிரதேசமாக மாற்றிய சட்டத்தை ஆதரித்தார். ஜி.எஸ்.டி.யை எதிர்க்காமல் மாநில நிதிநிலையை பாதாளத்துக்குத் தள்ளினார். தமிழ் மொழியைப் புறக்கணித்து இந்தித் திணிப்புக்கு உதவினார். அதனால்தான் மக்களால் தோற்கடிக்கவும் பட்டார். பாஜகவோடு சேர்ந்து சிறுபான்மைச் சகோதரர்களுக்கு அவரும் அ.தி.மு.க.வும் செய்த துரோகத்தை மறைத்து இப்போது ஒரு நாடகம் போடுகிறார். சிறுபான்மையின மக்கள் அவர் செய்த துரோகங்களை மறக்கவில்லை, மறக்கவும் மாட்டார்கள்! நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் எல்லா இடத்திலும் தோற்கடிக்கப்பட வேண்டும். இந்தியா கூட்டணியின் வெற்றியில்தான் இந்தியாவின் எதிர்காலமே இருக்கிறது. இந்தியா கூட்டணியின் ஆட்சி உண்மையான கூட்டாட்சியாக அமையும்” என்றார்.