“வேதாரண்யத்தை வென்றெடுக்க வேண்டும்”- கண்டிப்புடன் சொன்ன மு.க.ஸ்டாலின்

 
ச்

கடந்த முறை 12,329 வாக்குகள் வித்தியாசத்தில் வேதாரண்யத்தில் திமுக வேட்பாளர் தோல்வியடைந்த நிலையில், இந்த முறை வேதாரண்யத்தை வென்றெடுக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதுக்கோட்டை, வேதாரண்யம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை ஒன் டூ ஒன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று வரை மொத்தமாக 37 நாட்களில் 79 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை முதலமைச்சர் சந்தித்துள்ளார். இன்று நடைபெற்று வரும் கூட்டத்தில் கடந்த முறை தோல்வியுற்ற வேதாரண்யம் தொகுதியை வென்றே தீர வேண்டும் என்று நிர்வாகிகளிடம் முதலமைச்சர் கண்டிப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், பல்லாவரம் தொகுதியில் உட்கட்சிப்பூசல் என்ற சலசலப்பே இருக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டை தொகுதியில் கடந்த முறை வென்றதைவிட கூடுதல் வாக்குகளைப் பெற வேண்டும். அதுவே அரசின் திட்டங்கள் மக்களை அடைந்திருக்கிறது என்பதற்கான சாட்சி என்று மாவட்டச் செயலாளர் செல்லபாண்டியனிடம் அறிவுறுத்தினார்.