”மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார்”- அப்பல்லோ மருத்துவமனை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காலை அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜாவை கட்சியில் இணைக்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் , பரிசோதனைக்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், காலை நடைபயிற்சியின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதாகவும், தேவையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதாகவும், முதலமைச்சருக்கு தேவையான மருத்துவ பரிசோதனை நடந்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் லேசான தலைச்சுற்றல் தொடர்பான அறிகுறிகளுக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மேலும் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவருக்கு மேலும் சில பரிசோதனைகள் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலம் முழுவதும் தனது அலுவல் பணிகளைத் தொடர்ந்து செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.


