தென்மாநிலங்களுக்கான கவுன்சில் உறுப்பினராக அமைச்சர்கள் நியமனம்! தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியீடு!
தென்மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலின் தமிழக பிரதிநிதிகளாக, அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
நாட்டில் மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டப்படி, ஒவ்வொரு பிராந்தியத்திலும், தனித்தனி கவுன்சில்கள் அமைக்கப்பட்டன. மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில், இந்த கவுன்சில்கள் செயல்படுகின்றன. அந்த வகையில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் அடங்கிய, தென்மாநிலங்களுக்கான மண்டல கவுன்சில் செயல்படுகிறது. அதன் தலைவராக, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளார்.
கடந்த, 2023 முதல் துணை தலைவராக, அப்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் இருந்து வந்தார். அமைச்சர்களாக இருந்த டி.ஆர்.பி. ராஜா, சேகர்பாபு ஆகியோர் உறுப்பினர்களாக பதவி வகித்தனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், கவுன்சிலின் தமிழக பிரதிநிதிகளாக, சட்டம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.தமிழக அரசின் தலைமை செயலர், கவுன்சிலின் முதலாவது ஆலோசகராக இருக்கும் நிலையில், இரண்டாவது ஆலோசகராக உள்துறை செயலர் மணிவாசன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்த விபரம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

