மலேசியாவில் பயிலும் மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்காதது ஏன்?- அமைச்சர் விளக்கம்

 
வன்னி அரசு

மலேசியாவில் பயிலும் மாணவருக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கவில்லை என்பது தவறு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு விளக்கம் அளித்துள்ளார்.

‘அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி’ திட்டத்தின்கீழ் பயிலும் மாணவர்களுக்கு மாதக்கணக்கில் உதவித்தொகை கிடைக்கவில்லை என மலேசியாவில் பிஹெச்.டி படிக்கும் மாணவர் பாரதிதாசன் குற்றஞ்சாட்டி வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில், 2025 ஆம் ஆண்டுக்கான அனைத்து உதவித்தொகையும் வந்துவிட்டது. 2026 ஆம் ஆண்டுக்கான எந்த தொகையும் வரவில்லை. 5 மாதங்களாக உதவி வரவில்லை. அரசு ரெஸ்பான்ஸும் பண்ணல எனக் கூறினார்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, “மலேசியாவில் பயிலும் மாணவருக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கவில்லை என்பது தவறு. மாணவர் பாரதிதாசனுக்கு முதலாம் ஆண்டிற்கு ரூ.36 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு கட்டணங்களுக்கான உரிய ரசீதுகளை மாணவர் பாரதிதாசன் சமர்ப்பிக்கவில்லை. முதல் ஆண்டு ரசீதுகளை சமர்ப்பிக்காதபோதும் 2-ஆம் ஆண்டுக்காக ரூ.12 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் இந்தாண்டு (2026-2027) நிதியுதவி ஒப்புதல் கடிதங்கள் வழங்கப்பட்ட 362 மாணாக்கர்களில், 316 மாணாக்கர்கள் இங்கிலாந்து (UK) நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில்வதற்காக Offer Letters பெற்றுள்ளனர்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களுக்கு 19.08.2026 நாளிட்ட தனது நேர்முகக் கடிதத்தில், அயல்நாட்டு கல்வி உதவித்தொகை பயனாளிகள் இங்கிலாந்து நாட்டின் மாணவர் விசா / CAS பெறுவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து, மாநில அரசால் வழங்கப்படும் அயல்நாட்டு கல்வி உதவித்தொகையை அங்கீகரித்து, மாணாக்கர்களுக்கு விசா / CAS வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.” எனக் கூறியுள்ளார்.