பரந்தூர் மக்களை விஜய் சந்திக்கலாம்- தங்கம் தென்னரசு

விஜய் உள்பட யார் வேண்டுமென்றாலும், பரந்தூர் சென்று மக்களை தாராளமாக சந்திக்கலாம் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “பரந்தூர் விமான நிலையம் மிக அவசியமான ஒன்று, தவெக தலைவர் விஜய் மக்களை சந்திக்கலாம். விஜய் உள்பட யார் வேண்டுமென்றாலும், பரந்தூர் சென்று மக்களை தாராளமாக சந்திக்கலாம். தமிழ்நாட்டின் பொருளாதாரத்துக்கு பரந்தூர் விமான நிலையம் முக்கியமானது. பரந்தூர் பகுதி மக்களுக்கு சந்தை மதிப்பைவிட அதிக நிவாரணம் வழங்கப்படும். மற்ற மாநிலங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களைவிட சென்னை விமான நிலையம் பரப்பளவில் சிறியதாகவே உள்ளது. போராடுபவர்களை எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் நேரில் சென்று சந்திக்கலாம்.
தமிழ்நாட்டின் நிதிநிலை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தவறான தகவலைப் பரப்புகிறார். தமிழ்நாடு அரசின் கடன் விவகாரத்தில் பழனிசாமிக்கு அடிப்படை புரிதல் இல்லை. பொருளாதாரம், நிதி மேலாண்மை குறித்து அடிப்படையற்ற புகார்களை எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். தமிழ்நாடு அரசு திவாலாகிறது என்பது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. தமிழ்நாட்டின் நிதி நிலை கட்டுக்குள்தான் உள்ளது. நிதிக்குழு பரிந்துரை செய்ததைவிட குறைவான அளவே மாநில அரசு கடன் வாங்கியுள்ளது. 2021-2022 நிதியாண்டில் 28.7 சதவீதம் அளவுக்கு கடன் வாங்கலாம் என நிதிக்குழு பரிந்துரை செய்த நிலையில், 27.01 சதவீதம் அளவுக்கே கடன் வாங்கப்பட்டுள்ளது. மாநில நிதி நிலைமை கட்டுக்குள் உள்ளது” எனக் கூறினார்.